ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2006

Economics - 1

ஏன் பொருளாதாரம் படிக்க வேண்டும்?

சிலவற்றுக்கு எந்தத் தகுதித் தேர்வும் எழுதி தேர்ச்சி பெறாமலேயே பணி செய்யும் உரிமை எல்லோருக்கும் கிடைத்து விடுகிறது.
  1. திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் அறிவு பற்றிக் கேள்வியே கிடையாது.
  2. அரசியலில் சேர்ந்து தலைவராவது. தேர்தலில் ஓட்டுப் போடுவது. என்ன விளைவுகள் ஏற்படும் என்ற புரிதலே கிடையாது.
  3. வேலை செய்து சம்பாதித்து செலவு செய்வது.
இது எல்லாம் நம்முடைய பெற்றோரிடமிருந்து, பத்திரிகைகள் படிப்பதன் மூலம், நண்பர்கள், உறவினர்கள் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்கிறோம். சிலர் நல்லத் திறமைசாலிகளாக இருந்து விடுகிறார்கள். சிலர் தோல்வி அடைந்து விடுகிறோம்.

பள்ளியில் ஒழுக்கக் கல்வி, அரசியல் கல்வி, பொருளாதார அடிப்படைகள் என்று ஒவ்வொரு பாடத்தில் கற்றுக் கொடுப்பதும் பொதுவாக நடப்பதில்லை. கணக்கு, அறிவியல், வரலாறு புவியியல் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த வாழ்க்கைக் கல்விகளுக்குக் கிடைப்பதில்லை.

ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையைப் பாதிக்கும் பல செயல்களை செய்வதற்கு பொருளாதார முடிவுகளை எடுக்கிறோம். அரசும், தலைவர்களும் எடுக்கும் கொள்கை முடிவுகள் நமது வாழ்க்கையை உடனடியாகவோ சில காலம் கழித்தோ பாதிக்கின்றன. ஒரு வேலையை விட்டு இன்னொரு வேலைக்கு மாறுவதில் இருக்கும் விளைவுகளில் பல பொருளாதாரக் காரணிகள் இருக்கின்றன. சேமித்ததை எங்கு முதலீடு செய்வது என்பதில் கூட பல நுணுக்கங்கள் இருக்கின்றன.

இதை எல்லாம் எப்படியோ சமாளித்து வாழ்க்கை நடத்திக் கொண்டு வருகிறோம். அனுபவ அறிவுதான் இத்தனைக் கோடி மக்களை நடத்திச் செல்கிறது.

ஏதாவது துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களைக் கேட்டால், பட்டறிவு பலவற்றை கற்றுக் கொடுத்தாலும் ஏட்டறிவு கொடுக்கும் அடித்தளம் இருந்தால்தான் சரியான முடிவுகளை எடுத்து சரியான வழியில் செல்ல உதவியாக இருக்கும் என்று சொல்வார்கள். நாம் கூட நான்கு ஆண்டு பொறியியல் படிப்பிற்கு பிறகு வேலையில் சேர்ந்தால், இருபது ஆண்டுகள் அனுபவம் உள்ள மேற்பார்வையாளரை விட உயர் நிலையில் சேர்ந்து விட முடிகிறது. படிப்பு கொடுத்த அடிப்படை அறிவினால் ஒரு சில மாதங்களில் அவரின் மதிப்பையும் ஈட்டி விட முடிகிறது.

அதே போல, நாமெல்லாருமே அனுபவத்தின் அடிப்படையில் பொருளாதார முடிவுகளை எடுத்து வாழ்க்கையை ஓட்டி வந்தாலும், அடிப்படைக் காரணிகளைப் புரிந்து கொள்வது இன்னும் நல்ல வகையில் செயல்பட உதவும். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் நடைமுறை பொருளாதரம் பற்றிய பாடம் ஒரு கட்டாயப் பாடமாக எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறதாம்.

நம் ஊரில் பொருளாதாரம் படித்தவர்கள் கூட எங்கோ அமெரிக்க, இங்கிலாந்து ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களைத் தழுவிய கோட்பாடுகளையே உருப் போட்டு தேர்வு எழுதுகிறார்கள். எல்லோருக்கும் புரியும் வண்ணம் நம் நாட்டுச் சூழலுக்குப் பொருந்தும் படி பொருளாதாரக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை.

பால் சாமுவேல்சன்

பால் சாமுவேல்சன் என்பவர் எழுதிய பாடப் புத்தகம் மிகப் பிரபலமானது. அதை முதன் முதலில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு படித்த போது கதைப் புத்தகம் போல ஓடியது. தினசரி நாம் பார்க்கும் உண்மைகள், நாம் செய்யும் செயல்கள் எப்படி நடக்கின்றன என்பதின் விளக்கங்களின் உருவம் ஒரு மாயக் காட்சி போல உருவெடுத்தன. அந்தப் புத்தகமும் பல பதிப்புகள் கண்டு இன்றைக்கு முப்பதாம் பதிப்பில் உள்ளது. சாமுவேல்சனுக்கும் வயதாகி இன்னொரு சக ஆசிரியருடன் வெளியிடுகிறார். புத்தகத்தின் நடை கொஞ்சம் வறண்டு போய் விட்டிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்திருந்தால் ஒருவேளை நான் படித்திருக்கவே மாட்டேன். இப்போது படிக்க முடிகிறது.

அடிப்படைக் கேள்விகள்

உலகத்தில் பற்றாக்குறையே இல்லை என்று வைத்துக் கொள்வோம். எல்லோருக்கும் அவர்கள் விரும்புவதை எல்லாம் கொடுக்கும் அளவுக்கு எல்லாம் கிடைக்கின்றன. அப்படி ஒரு உடோபிய சமூகத்தில் எந்தச் சிக்கலும் கிடையாது. யாரும் எதை வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். சந்தையும் இருக்காது, விலைகளும் கொடுக்க வேண்டாம்.

ஆனால், எந்தச் சமூகத்திலும் அப்படி ஒரு உடோபியா வந்து விடவில்லை. இவ்வளவு பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகும், நகரெங்கும் உயர் செலவு கடை அடுக்குகள் நிரம்பியிருக்கும் போதும், ஒரு சிலரின் தேவைகளைக் கூட நம்மால் முழுமையாக நிறைவேற்றி விட முடியாது. எவ்வளவு ஆசைகள்! எவ்வளவு தேவைகள்! அவை எல்லாவற்றையும் நிறைவேற்ற இன்றைக்குக் கண்டிப்பாக முடியாது. அரை வயிற்றுக் கஞ்சிக்குப் போராடும் மக்களுக்கு உணவும், உடையும், இருப்பிடமும் கொடுக்கக் கூட நம்மிடம் இருக்கும் வளங்கள் போதவில்லை.

அதாவது இருப்பது பற்றாக்குறையில்தான் என்பது முதல் உண்மை. அப்படி இருப்பதை சரிவரப் பயன்படுத்தி சமூகத்தின் எல்லாப் பிரிவினருக்கும் சேர்த்து மிக அதிகமான பலன் விளைக்கும் வழியைக் காண்பது பொருளாதாரவியலின் முக்கிய நோக்கம்.

ஒரு விவகாரமான உதாரணம்

சரிவரப் பயன்படுத்துவது என்றால், ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் கொடுத்தால் சமூகத்தின் ஒட்டு மொத்த நிறைவு குறைந்து விடாத நிலைமைதான். ஒரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மாதம் ஐம்பதாயிரம் ஊதியம் வாங்கும் ஒருவரிடம் இருந்து மாதம் ஆயிரம் ரூபாய், தினமும் ஐம்பது ரூபாய் ஈட்டும் தொழிலாளிக்குப் போய் சேர்கிறது என்று வைத்துக் கொள்வோம். முதலாமவர் கண்டிப்பாக வருத்தப்படுவார். "என்னப்பா இது, இந்த ஆயிரம் ரூபாய் இருந்தால் எவ்வளவு செலவுக்குப் பயன்படும்" என்று அவருக்கு வருத்தம்தான். அந்த வருத்தத்தின் அளவு X என்று வைத்துக் கொள்வோம்.

ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்ற தொழிலாளியின் குடும்பத்திலோ மகிழ்ச்சி. அடுத்த மாதம் பள்ளி திறக்கும் போது பையனுக்கு ஒரு சீருடை எடுக்கலாம், ஒழுகும் வீட்டுக் கூரையைச் செப்பனிடலாம், வீட்டு அம்மாவுக்கு வசதியாக ஒரு புகையில்லா அடுப்பு வாங்கிக் கொள்ளலாம். இந்த மகிழ்ச்சி Xஐ விட அதிகமாக இருந்தால் ஒட்டு மொத்த சமூகத்தின் நலம் அதிகரித்து விடுகிறது. அதையே அந்தத் தொழிலாளி தோழர்களுடன் குடித்துத் தீர்த்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் நிறைவு Xஐ விடக் குறைவாக இருந்தால் குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கை ஒட்டு மொத்த நலனைக் குறைத்து விடுகிறது.

2 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

//திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வது. குழந்தைகளை வளர்த்து
ஆளாக்கும் அறிவு பற்றிக் கேள்வியே கிடையாது.//

user manual & trouble shooting guide இல்லாமத்தானே பசங்களும் பிறக்குது:-)))))

மா சிவகுமார் சொன்னது…

:-)

அதனால்தான் சிக்கல்களும் அதிகம். வேறு வழி இல்லையே! :-)

அன்புடன்,

மா சிவகுமார்